உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 11 October 2016

உன்னால் பண்டிகை - கவிதை

உன்
கத்தி போன்ற
கூர்விழி கண்ணால்
என்னை காண்கிறாய் .....
கண்டேன்  ஆயுதபூஜை ..

நீ பார்க்கையில் 
என் மனதில் ஆயிரமாயிரம்
வர்ண விளக்குகள்
எரிந்து சுடர் விடுகிறது !
கண்டேன் தீபாவளி..
                          - கவிஅன்பு  

உன்னுடன் காதல்

இரவில் சத்தமின்றி
பூக்கள் பூக்கிறது ! என்
இதயமும் யுத்தமின்றி
உன்னிடம் தோற்கிறது !!

இருளை தின்று
கொண்டே அந்த
விடியல் புலர்கிறது !
இதயத்தை தின்று
கொண்டே இந்த
காதல் வளர்கிறது !!
               - கவிஅன்பு 

அவளுடன் காதல் - கவிதை

எண்ணிடலங்கா காட்சிகள்
எத்தனையோ கண்டாலும்
அத்தனையும் மறந்து போகிறது !
அவள் நினைவே இதயமென்று
அடியேன் வாழ்க்கையும் ஆகிறது !!

சிறு வட்டப்புள்ளி வைத்து
ஆரம்பித்த காதல் இன்று
வானம் கொள்ளா கோலமிடுகிறது !
மெல்லமெல்ல இதயம் உரசி
முழுமதி அவள் நினைவே
என் உயிரை தொடுகிறது  !!
         - கவிஅன்பு 

இயற்கையை ரசி

வயித்துல தொப்பையும்
மனசுல பாரமும் - நல்லா
வளந்துட்டேதான் இருக்கும்
வீட்டுக்குள்ள இருந்து
சாப்பாட்டை ருசிச்சா !

வயிறும் சமமாகும்
மனசும் சந்தோசமாகும்
வெளியில் சுற்றி திரிந்து
இயற்கை அழகை ரசிச்சா !!
              - கவிஅன்பு 

விரக்தி மனதை விடு - கவிதை

இளைஞனே!
உள்ளத்தில் ஒன்றை மட்டும்
வைத்து கொண்டு
உலகமே போலியென்று மனதில்
விரக்தி கொள்ளாதே !..
உண்மைகளும் உலவத்தான் செய்கின்றன
உறுதியான மனதைவிட்டு
நீ என்றும் உருமாறி
விலகி செல்லாதே !!
                         - கவிஅன்பு 

அவளோடு காதல் - கவிதை

எல்லாவற்றையும் மறைத்து வைக்க 
முடிந்த என்னால் உன் 
மீதுள்ள காதலை மட்டும் 
மறைக்க இயலவில்லையடி !
உன்னை பற்றிய சிந்தனைகளே 
தினம் தினம் என் 
மனதில் தோன்றும் - நல்
இன்ப தொல்லையடி ! !

ஒவ்வொரு வினாடி பொழுதும் 
இதயத்தில் உன் நினைவுகள்
நின்று கொண்டே இருக்கிறது !.. 
மெல்ல மெல்ல அதுயென்னை
மென்று  தின்றுகொண்டே இருக்கிறது !!
                                    - கவிஅன்பு


Saturday 1 October 2016

நட்பு பயணம்

உள்ளமெனும் கண்ணாடியை உடைக்கும் 
                          கயமைகொண்ட காம கற்களும்...... 
உணர்வுளை ஆழமாய் சிதைக்கும்  
                         துன்பமான  துரோக முட்களும்.......
இல்லாத பாதையில் இடைவெளியற்று 
                       தொடர்ந்து கொண்டே இருக்கும்.....
உனக்கும் எனக்கும் இடையேயான 
                       நட்பெனும் நீண்ட  நல்பயணம்  ! ! ..
                                                    - கவிஞர் கவிஅன்பு  

இன்றைய இளைஞன்

அடுத்ததெரு பூங்காவின்  இயற்கையை
                          ஆர்வமாய்  ரசிப்பதும் மறந்து,
அருகில் இருக்கும் இதயங்களை
                          அன்புடன் நேசிப்பதும் மறந்து  
இமைமூடாமல் பார்த்தே  - நல்
                          இதயத்தை கெடுக்கும் இந்த
இணையமே கதியென்று  இன்று
                         இருப்பதும் ஏனோ இளைஞர்களே? ......
                                              - கவிஅன்பு 

Saturday 10 September 2016

காய்ந்து போவது காவிரி ஆறு மட்டுமல்ல...

காதலிக்காக  ஆயிரம்
கவிதைகள் எழுதுபவர்
எல்லாம் ஏனோ - வறண்ட
காவிரிக்காக  ஒன்றும்
எழுதவில்லையே !

"காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்.”
பாரதி சொன்னான்...- இன்று
காவிரி வெற்றிடமாய் மாறி விட்டதே..
"வண்ணம் பாடியே நடக்கும் காவிரி"
பாரதிதாசன் சொன்னான் - இன்று
வளமின்றி  காவிரி
வறுமையுடலுடன் படுத்துவிட்டதே.....

கருகும் பயிருக்காய்
கண்ணீர் வடிக்கும் விவசாயினை
கண்டுணர மனமில்லை.....
கபாலி பட நான்கு காட்சிகளை
கண்டு அலைகிறானே தமிழன் !...

காய்ந்து போன நிலத்தை எண்ணியெண்ணி
ஓய்ந்து போகிறான் நம் விவசாயி - நடிக
கட் அவுட்டுக்கு பாலூற்ற கூடும் கூட்டம் கூட
கடைமடை விவசாயிக்கு வருவதில்லையே.....

வேற்றுமொழி  பேசும் மாநில ஒற்றுமை - அமுது
 ஊற்றாய் இனிக்கும் தமிழ் பேசும்
நம் தமிழனிடம் இல்லையே  !...
திராவிடம் பேசி மெல்ல பிரிப்பதும்
தமிழக அரசியலின் ஒரு தொல்லையே !!

அறவழியோ ஆக்ரோசமோ போராட்டமெனில்
அரசியல்வாதியும்  அடித்தட்டு மக்களும்
ஒன்றாய்  சேர்வது அண்டை மாநிலம்......
சாதியிலும் மதத்தாலும் கட்சியாலும்
அடித்து கொண்டு பிரிந்து போவது
நம் அழகு தமிழ்மாநிலம்.......

எத்தனை கோடி தமிழ் மக்கள்
எங்கெங்கோ  இருந்தென்ன பயன்? -
ஒற்றுமை இன்றி
ஈழத்தின்  நிலத்தை விட்டோம் -கச்சத்தீவை
கயவருக்கு கொடுத்தோம் அன்று.......
காவிரி, முல்லை , பாலாறு கூட
கரம்நழுவி செல்லும் நிலையில் இன்று ...

சரித்திரத்தில் பெற்ற பெருமை  - தமிழ்
சந்ததி வாழும் வரை தழைக்க வேண்டும்   ..
இதற்கு நல்லொற்றுமை தமிழருக்குள்
நிலைக்கவேண்டும் - இல்லையெனில்
வற்றிகாய்ந்து போவது காவிரிஆறுகள் மட்டுமல்ல
தமிழினத்தின் வளர்ச்சி பெருமையும்தான்......
                                       - கவிஞர் கவிஅன்பு

காவிரி பிரச்சனை - கவிதை

அடித்து தாக்கப்பட்ட
நான்கு சக்கர வாகனங்கள்....
கண்ணாடியோடு  சேர்ந்து
நொறுங்கி விழுந்து
கொண்டிருந்தது
இந்திய இறையாண்மை......


Monday 15 August 2016

குழந்தை தொழிலாளர் கவிதை

மண்ணில் ஓடியாடி மழலையோடு
மனமகிழ விளையாடும் பருவத்தில்
மண்ணைக் கொத்தி பணிசெய்யும்
மாறுபட்ட நிலையினை பாரீர் !.....
மண்ணை மட்டுமல்ல சிறுவன்  நம்
மனதையும் கொத்தி செல்கிறான்.....

பள்ளிசென்று பாடம்கற்று-புத்தகமதை
கரங்களில் ஏந்தும் பருவத்தில்
கனமான செங்கற்களை கையிலேந்தும்
கடினமான நிலையினை பாரீர் !.....
செங்கற்களை மட்டுமல்ல அவன்-சீழ்பிடித்த
சமுதாய நிலையினையும் ஏந்தி செல்கிறான்...

மெலிந்த உடலுடன் - அருவியாய்
வழிந்த வியர்வை பரவ
மலராத மொட்டொன்று இங்கே
மரக்கட்டை சுமந்து திரியும்
மனம்நோகும்  நிலையினை பாரீர் !....
மரக்கட்டையை மட்டுமல்ல சிறுவன்-வறண்ட
குடும்ப வறுமையினையும் சுமந்து திரிகிறான்

தோளில் தகப்பன் தூக்கிவைத்து
துள்ளும் மகிழ்வுடன் திரியும் வயதில்
தோளே சுமைதாங்கியாய் மாறிவிட்ட
துயரமான நிலையினை பாரீர் !....
தோள்சுமையை மட்டுமல்ல சிறுவன்-தேசத்தின்
அவலத்தையும் சேர்த்தே சுமக்கிறான்......

குழந்தை வேலை செய்யும் இக்குற்றத்திற்கு
பெற்றோரும் ஒரு காரணம்
பெருஞ்செல்வந்தனும் ஒரு காரணம்
சமுதாயமும் ஒரு காரணம்..
சாக்கடை அரசியலும் ஒரு காரணம்...

முதலாளிகள் மாறுகையில் இக்குழந்தைகளின்
முகவரிகள் மாறுவது எப்போது?
அரசியல்வாதி மாறுகையில் இக்குழந்தைகளின்
அவலநிலை மாறுவது எப்போது?

"இனியொரு விதி செய்வோம்" என்றான் பாரதி ....
விதிகள் எங்கே செய்வது ?- சிறார் சட்டத்துக்கு
எதிரே சதிகள்தான் இங்கே செய்கின்றனர் ...
சிறு தளிர்கள் தளர்ந்து போகாமல் -ஒருநாள்
தளிர்த்து வளரும் நிலையது பெறும் !
அன்றுதான் இச்சிறுவர்
மனதில் மகிழ்ச்சி அலையது வரும் !!
                            - கவிஅன்பு

சுதந்திர தின கவிதை

நான்கடுக்கு பாதுகாப்பின்
நடுவில் ஏற்றப்படும்
தேசிய கொடி ...

காணாமல் போன
காந்தியும் சுபாஷும்
கொடிக்கம்பம் அருகில்
புகைப்படமாய்....

மிட்டாய் போயி லட்டு
வந்தது - அழுக்கு ஆடையுடன்
பெற்று கொண்ட சிறுமி...

சாலைவிதி மீறிய பயணம்..
இடைமறித்த காவலர்..
கையூட்டு பெற்று
கண்டும் காணாமல் போயினர்...

நாளிதழை பார்த்தால்
கற்பழிப்பு  செய்தி..
சமாதான புறாக்கள்
சத்தமின்றி இருக்கின்றன...

விழிப்புடன் எல்லைகாக்கும்
ராணுவ வீரர்கள்..
பாராளுமன்றத்தில்
தூங்கிவழியும் அரசியல்வாதிகள்...

சுதந்திரம் பெற்றது நள்ளிரவில்
அதனால்தான் என்னவோ
முழுமையான விடியல் நோக்கி
பயணம் இன்னமும் தொடர்கிறது...
சுதந்திர தின வாழ்த்துகள்
                           - கவிஅன்பு (15.08.2016)


கவிஞர் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி கவிதை

போகாதே போகாதே என்றெழுதிவிட்டு
போய்விட்டாயே இன்று எம்மைவிட்டு !
கனவுகள் பூக்குமென்று  பாடிவிட்டு-இன்று
கணத்தில் உதிர்ந்து விட்டாயே !

முதல்மழை நனைக்கும் என்றாய்
இறப்பு உன்னை அணைக்கும் என்று
எண்ணவில்லை நாங்கள்....
கல்லறையில் கூட ஜன்னல்வைத்து
பார்ப்பேன் என்றாயே ! இன்று
கல்லறையில் வாசம் செய்ய
எம்மை விட்டு சென்றாயே !!

வானம் மெல்ல வந்திறங்கும் என்று
சொல்லிவிட்டு
வானம் நோக்கி நீ சென்று விட்டாயே !
காற்றை கொஞ்சம் நிற்க சொன்னாய்
கருத்திலேற்றி மகிழ்வில் ஆடினோம்  ! இன்றுன்
மூச்சு காற்று  அல்லவா நின்றுவிட்டது !!
கண்களில் சோகமேறி மனதால் வாடினோம் !!

உறவுகளின் நேசத்தை எழுத்தில்
உணர்ந்து சொல்லும் உனைபோல
உன்னத கவிஞனை இழந்து
துக்கமடைகிறோம் !....
அசுரகல் பட்டு தெறிக்கும் கண்ணாடிபோல்
மனதால் உடைகிறோம் !! ..
முத்துக்குமார் என்று நாங்கள் மட்டுமல்ல
மூன்றாவது தேசியவிருதும் கூட இனி
உனை தேடி அலையும்...

கடல் சிப்பிக்குள் முத்து இருக்கும் -தமிழ்
கவிதை சிந்தனைக்குள் முத்துக்குமார்
நீ என்றும் இருப்பாய்...
இப்படிக்கு
ஈடு இணையற்ற உன் இறப்பால்
இதயம் நொறுங்கிய ஒரு ரசிகன் ..
                                 - கவிஅன்பு (14.8.2015)

Friday 15 July 2016

இலங்கை தமிழருக்காய் சிங்களவனை நோக்கி....

கண்ணீர் நிறைந்த
ஈரமுகம் கண்டும் கருணையற்ற
கோரமுகம் கொண்டு
கொத்து குண்டினை வீசினாயடா.......
சிங்க கொடி புனைந்து
மனிதனை கடித்து குதறும்
மானம் கெட்ட ஓநாயடா.
நீ........

பச்சை குழந்தைகள் என்றும் பாராமல்
பயங்கர ஆயுதம் கொண்டு
பரண்டும் மிருகமே!...
உனக்கு பால் ஊட்டியது
தாயா?இல்லை பிணங்கள் தின்னும்
பேயா?.........
பிணக்குவியலில் இச்சை கொள்ளும்
பிசாசு கூட்டமே!....
கைகளை பின் கட்டி
கல்லால் அடிக்கும்
கோழைதனத்தின் கொடி தூக்கிகளே!

புத்தரின் பெயர் சொல்லி
சுடுகாட்டினையும் சுரண்டும்
புத்தி கெட்ட மனிதர்களே!..இனி
புகலிடம் கிடைக்காது உன் சமாதியில் சிறு
புல்லும் முளைக்காது......

என் தமிழ்
சுற்றங்கள் செய்த குற்றங்கள்தான் என்ன?
அன்றே
சுதந்திர காற்றை நீ
சுவாசிக்க தந்திருந்தால்
சுடுகின்ற ஆயுதங்களை
சுமந்திருக்க மாட்டோமடா!...

மறுக்கப்பட்ட நீதியுடன் உன்னால்
வெறுக்கப்பட்ட நாங்கள்
வெந்து தணிந்து வீழ்வோம் என்று
வீண் கற்பனை செய்தாயோ?....

மரங்களை வெட்டி விட்டோம் என்று
மகிழ்ச்சி கொள்ளாதே! -அதன்
விதைகள் விழுந்து விட்டன-பல
வீர மர(ற)ங்கள் விளைந்து விட்டன!!
விழுதுகள் உன்னை நெருக்கும் காலம்
விரைவில் வரும்! -அன்று என்
தமிழருக்கும் வானம்
விடியல் தரும்!!...........
                    - கவிஅன்பு

நேசத்தை தேடுகிறேன்....

உண்மை
நேசங்களை தேடுகிறேன்
நியாய விலை கடையில்......
கலிகால மடியில் கள்ளி பால் குடித்து
நேசங்களும் இங்கே நீர்த்து போய்விட்டனவோ?....
உயிரை நேசிக்கும் மனம்
உருவம் பார்ப்பதில்லை-அழகு
உருவம் பார்க்கும் மனம்
உயிரை நேசிப்பதில்லை--இதில்
உண்மை எது பொய் எது நல்ல
உள்ளத்திற்கும் புரிவதில்லை....
பச்சோந்தி மனங்களில் நேசமெனும்
பாசங்களிங்கே பரிதவித்து வாடுகின்றன......
பால் மனமென்று நேசம் வைத்தால்
சுண்ணாம்பாய் மாறியது உள்ளத்தை
சுடுகிறதே வார்த்தைகளால்........
உண்மை நேசங்கள் உயிராய்
பழகும் பாசங்கள் -சுற்றும்
உலகில் உள்ளவனா?உண்மையாய்
தேடுகிறேன்.........
                      - கவிஅன்பு 

எங்கே போற மனசே?

எங்கே போற மனசே? நீ
எங்கே போற..
என்னை விட்டு கடந்து அவளை பார்த்து
நீ செல்கிறாய்...
நான் சொல்லும் வார்த்தை கேட்காமல்
என்னை நீயே வெல்கிறாய்...
ஓ என் மனசே !
பாறை மேல படுத்து இருந்த நீ
பனித்துளியை தேடுகிறாய்....
சூரியனாக வலம் வந்த நீ
சுடர் நிலவ தேடுகிறாய்....
ஓ மனசே!
கடலுக்குள் போகாத காட்டாறு போல
கண்டபடி போற உனக்கு
கடிவாளம் போட்டவ யாரு? திமிரால
நிழலுக்கும் ஒரு சாலை போட்ட உனக்கு
நித்திரைய கெடுத்தவ யாரு?
ஓ மனசே!
எங்க போற நீ என்னை விட்டு தள்ளி..
சீரிய பாயும் புலி இப்போ
சிக்கியது பதுங்கு குழி ..
வேணாம் சொன்ன கேளு
வலிக்க போகுது உன் காலு
மனசே ஓடாத நில்லு..அவளை பார்த்து
மயங்காம நில்லு ..
பாக்காம போறவள பாக்குறதுக்கு என்கிட்ட
கேக்காம போறியே மனசே.....
எங்க போற மனசே..எங்க போற...
                    - கவிஅன்பு

(எழுத்து தளத்தில் வழிப்போக்கன் பெயரில் வரைந்த கவிதை --)

கருத்த புள்ளைக்கு கவிதை எழுதுறேன்

கருத்த புள்ளைக்கு கவிதை எழுதுறேன்
காட்டுவழி போற என் தோகைமயிலே
கண்ணால பேசுற என் கருங்குயிலே
தளுக்கி மினுக்கி நீ நடக்கையில
தள்ளாடுதடி மாமன் மனசு அது
உங்கிட்ட வழுக்கி விழுந்து போகுதடி
வார்த்தை பேசாம ஊமையாவும் ஆகுதடி..

சிவத்த சிமிக்கி போட்ட கருத்தபுள்ள
சிக்குன்னு சடை முடிஞ்ச சின்ன புள்ள
பூசேலை கட்டி போறவளே நான் சொல்லாம
என் மனசுக்குல வாரவளே..

மண்ணுல மெதுவா நீ பாதம் பதிச்ச..... என்
மனசுக்குல ஒன் நெனப்ப மருதாணியா ஏன் வச்ச..
உச்சிவகிடு பார்த்துட்டு உருகுலைஞ்சு போனேன்
உன்னை நெனச்சு பொலம்புற பைத்தியம் ஆனேன்..

நிலத்தை பாத்து நடக்குரவளே மேல
நிமிந்து கொஞ்சம் பாரடிம்மா - உன்னைநெனச்சு
ஏங்கி போயி நான் இருக்கேன் - அருவாள விட்டுடு
கையாலயே நாத்து அருக்கேன்....அதை
ஆத்தா பாத்துட்டு அடிக்க வாறா
அப்பன் பார்த்துட்டு பிடிக்க வாரார்....

உன் கண்ணால அடிச்ச காதல் அடியில...
என்னால நெல் அறுக்க முடியல .....
கொஞ்சம் கொஞ்சமா உசுரை எடுத்தவளே
தூங்க முடியாம என் நித்திரைய கெடுத்தவளே..
அறுவடை நெல்லு மாறி நீ குனிஞ்சது போதும்
என் ஆத்தாளை பார்த்து பணிஞ்சது போதும்

வயக்காட்டுல ஓடி திரியலாம் வாடி புள்ள... அதுல
கெடைக்கிற சந்தோசத்தை எப்படி நான் சொல்ல...
கை பிடிக்காம நீ போன கலங்கிடுவேன் நானு - என் நெலம அப்புறம் தரைல தள்ளாடுற மீனு....

கண்ணுக்குள்ள இருக்குற கருத்த மேனிக்காரி
நெஞ்சுக்குள்ள போன நெத்திலி உடம்புக்காரி - உன்
கொலுசொலி கேக்கும்போது தன்னால
கொஞ்சி நான் பேசுறேன் ..
ஈட்டியா நீ பாக்கும்போது உன் முன்னால
கொஞ்சம் நான் கூசுறேன்...

இப்போ நான் இருக்குறேன் உன் மேல
பைத்தியம் முத்தி - நெறைய சொல்லிட்டே
இருக்கலாம் உன்னை பத்தி...
ரெட்டை சடை போட்டவளே
மாமா நீயான்னு கேட்டவளே
சீக்கிரம் வாடி சிங்கார பொண்ணே
கல்யாணத்த பண்ணிக்கலாம்
கருத்தா ரெண்டு குழந்தை பெத்துக்கலாம்
கருப்பாயி உன்னை பார்த்து இருக்கேன்
கண்மாகரையில காத்து இருக்கேன்..

- கருத்த புள்ளைக்காக என் கானம் தொடரும்
                                          - கவிஅன்பு
(எழுத்து தளத்தில் வழிப்போக்கன் பெயரில் வரைந்த கவிதை )















ஓடி வா என் செல்லகுட்டி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பவ் பவ் நாய்குட்டி - இங்க
பாய்ந்து வா நாய்குட்டி....
பிஸ்கட் தரேன் நாய்குட்டி-என்
பின்னால் வா நாய்குட்டி....
கொரைக்காத நாய்குட்டி-உனக்கு
கொய்யா தரேன் நாய்குட்டி...
எழுந்து வா நாய்குட்டி - நல்லி
எலும்பு தரேன் நாய்குட்டி...
முழிக்காத நாய்குட்டி - திங்க
முறுக்கு தரேன் நாய்குட்டி....பார்வையில
பயம் காட்டாத நாய்குட்டி - நொறுக்கு
பகோடா தரேன் நாய்குட்டி....
கத்தாத நாய்குட்டி-இனிப்பான
கரும்பு போன்ற நாய்குட்டி...நீ
எங்க வீட்டு நாய்குட்டி வேலைக்கு உன்னை
ஏவ மாட்டேன் நாய்குட்டி....
பஞ்சு மேனி நாய்குட்டி - என்மேல
பாசமுள்ள நாய்குட்டி...மனசுல
நஞ்சு இல்லா நாய்குட்டி - நீ
நான் வளர்க்கும் நாய்குட்டி...
பிரியாணி சூட செஞ்சு -உனக்கு
பிரியமா போடுவேன்...
சாப்பிடாம நீ இருந்தா - மனசு
சங்கடத்துல வாடுவேன்..
அழகான என் நாய்குட்டி - குணத்துல
அன்பான என் நாய்குட்டி...
பழகுனா போதும் என் நாய்குட்டி
பக்கதுல வந்து வாலாட்டும்...
உறவுக்கார நாய்குட்டி - இரவில்
உசுரை காக்கும் நாய்குட்டி
நல்ல புள்ள நாய்குட்டி - இது
நான் வளர்க்கும் நாய்குட்டி...
ஓடி வா நாய்குட்டி - வீட்டுக்கு
ஒண்ணா போகலாம் நாய்குட்டி ...
பவ் பவ் நாய்குட்டி - இங்க
பாய்ந்து வா நாய்குட்டி..
              - கவிஅன்பு

சின்ன வயசுல தோ தோ நாய்குட்டி துள்ளி வா நாய் குட்டி நு பாடல் படிச்சு இருப்போம்..அந்த ராகத்துல படிச்சா சுவையா இருக்கும்னு நெனைக்கிறேன்.. :)
--எழுத்து தளத்தில் வழிப்போக்கன் பெயரில் வரைந்த கவிதை --

கன்னக்குழி கவிதை


மயக்கமூட்டும் மங்கை



கடிகாரம் கவிதை


பெண்ணின் வலி

மாதத்தில் மூன்று நாள்தான்
எனக்கு உடலில் வலி ..
மாதத்தில் முப்பது நாளும்
உன்னால்தான் எனக்கு
உள்ளத்திலும் வலியடா...
மதுவை குடித்து
மனதில் சந்தேகம் கொண்டு
அடிக்கும் கணவனே......
               - கவிஅன்பு 

படித்ததில் ரசித்தது

மழைபெய்து விட்டு போனாலும்
அதன் தடம்
மண்ணில் ஈரமாகவும் இருக்கும்...
மரத்தில் தண்ணீர் துளிகளாகவும்
இருக்கும் - அது போல
நீ பேசி முடித்து விட்டு
போன பிறகும் உன் நினைவுகள்
என்னுள்  இருக்கும் ..

படித்ததில் ரசித்தது

நான் உன்
இமைகளுக்குள் இருக்கும்
கரு விழியாக
மாறி விட்டால் என்ன?..
என்றே தோன்றுகிறது......
ஏனென்றால்
நீ போகும் இடமெல்லாம்
நீ பார்க்கும் இடமெல்லாம்
உன்னுடன் இருப்பேனே நான் !.......

படித்ததில் ரசித்தது...


நாம் இருவரும்
கண் இமைகளாக இருந்தால்..
நீ மேல் இமை ..
நான் கீழ் இமை..
ஒவ்வொரு நொடியும்
உன்னை நானும்
என்னை நீயும்
தீண்டிக்கொண்டே இருப்போம்.
.

Monday 4 July 2016

உனக்காய் நான் இருப்பேன்

விழிமூடி நீ தூங்க
விசிறியாக நான் இருப்பேன் !
மொழி பேசி நீ சிரிக்க
தமிழாக தான்  இருப்பேன் !!
உண்மையாய் நேசம் காட்டும்
உறவாய் நான் இருப்பேன் !
உனக்கொன்று நேர்ந்தால் மண்ணில்
உயிரற்று சாய்ந்து இருப்பேன்!!
உன் கன்னத்தில் என் முத்தங்கள்
அது காமத்தை சொல்லாது !
என் எண்ணத்தில் உன் நினைவுகள்
அது என்றும் எனைவிட்டு செல்லாது !!
                                  -கவிஅன்பு

Wednesday 22 June 2016

இணைய நட்பு

பள்ளிகூடத்தில் உன்னுடன்
               படிக்கவில்லை நான்....
பக்கத்து வீட்டிலும் உன்னை
               பார்த்ததில்லை  நான்...
சொந்த ஊரில் உன்னுடன்
               சுற்றியதில்லை நான்....
கல்லூரியில்  உன்னுடன்
                கற்கவில்லை  நான்...
பயணத்தில் கூட  உன்னுடன்
               பழகியதில்லை நான்...
அலுவலகத்திலும்  உன்னை
              அருகே கண்டதில்லை நான்...
எங்கோ நீயிருக்க..எங்கோ நான்..,...
            இணையத்தில் பார்த்து
இனிதாய் நாம்  பழகினோம்
            முழுதாய் புரிந்து கொண்ட
முழுமதி நட்பாய் மாறி
               இன்றுயென் மூச்சுடன்
கலந்து விட்டாயடி...
                                        -கவிஅன்பு

அவள் மட்டுமே எல்லாம்...

என் கவிதைகளை சிலர் ரசிக்க
       நானோ அவள்  கவிதைகளை ரசிப்பேன்...
என் பேச்சினை சிலர் ரசிக்க
         நானோ அவள் பேச்சினை ரசிப்பேன்.
என் சிரிப்பினை சிலர் ரசிக்க
        நானோ அவள் சிரிப்பினை ரசிப்பேன்....
என் பாடலை சிலர் ரசிக்க
       நானோ அவள் பாடலையே ரசிப்பேன்
என் குறும்பினை சிலர் ரசிக்க
        நானோ அவள் குறும்பினையே ரசிப்பேன்
என் கோபத்தை சிலர் ரசிக்க
       நானோ அவள் கோபத்தை ரசிப்பேன்...
அவளே என் இதயமென்று  ஆனபின்பு
            அவளே என் உயிரென்று ஆனபின்பு
அவளே என் சுவாசமென்று ஆனபின்பு
           அவளே என் சிந்தனையென்று ஆனபின்பு
அவளைத்தவிர வேறொன்றை ரசிக்க
            என்னால் எப்படி முடியும் ??
                                     -  கவிஅன்பு

Sunday 15 May 2016

வாக்களிப்போம் கவிதை

விரலில் மருதாணி வைத்தால்
மகளிருக்கு அழகு!
விரலில் மை வைத்தால் அது
மக்களாட்சிக்கு அழகு!!
மரங்களில் வலிமையானது தேக்கு!
மக்களிடம் வலிமையானது வாக்கு!!
                    -கவிஅன்பு

Wednesday 16 March 2016

ரத்த தானம்

சுகாதார வாழ்வுக்கு தேவை சுத்தம்...
மனிதஉயிர் வாழ தேவை இரத்தம்...
உலகம் வாழ யுத்தம் விடு - மனித
உயிர்கள் வாழ இரத்தம் கொடு..
  - கவிஅன்பு

காதல்

இருளை தின்று கொண்டே
விடியல் புலர்கிறது !...
இதயத்தை தின்று கொண்டே
காதல் வளர்கிறது !!...
            - கவிஅன்பு

காலை வணக்கம்

இதய கிண்ணத்தில்
கவலைகளை  மட்டுமே
நிரப்பி வைக்காதீர்....
மகிழ்ச்சியென்ற தேனையும்
கொஞ்சம் ஊற்றுங்கள்...
            - கவிஅன்பு