உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 15 August 2016

கவிஞர் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி கவிதை

போகாதே போகாதே என்றெழுதிவிட்டு
போய்விட்டாயே இன்று எம்மைவிட்டு !
கனவுகள் பூக்குமென்று  பாடிவிட்டு-இன்று
கணத்தில் உதிர்ந்து விட்டாயே !

முதல்மழை நனைக்கும் என்றாய்
இறப்பு உன்னை அணைக்கும் என்று
எண்ணவில்லை நாங்கள்....
கல்லறையில் கூட ஜன்னல்வைத்து
பார்ப்பேன் என்றாயே ! இன்று
கல்லறையில் வாசம் செய்ய
எம்மை விட்டு சென்றாயே !!

வானம் மெல்ல வந்திறங்கும் என்று
சொல்லிவிட்டு
வானம் நோக்கி நீ சென்று விட்டாயே !
காற்றை கொஞ்சம் நிற்க சொன்னாய்
கருத்திலேற்றி மகிழ்வில் ஆடினோம்  ! இன்றுன்
மூச்சு காற்று  அல்லவா நின்றுவிட்டது !!
கண்களில் சோகமேறி மனதால் வாடினோம் !!

உறவுகளின் நேசத்தை எழுத்தில்
உணர்ந்து சொல்லும் உனைபோல
உன்னத கவிஞனை இழந்து
துக்கமடைகிறோம் !....
அசுரகல் பட்டு தெறிக்கும் கண்ணாடிபோல்
மனதால் உடைகிறோம் !! ..
முத்துக்குமார் என்று நாங்கள் மட்டுமல்ல
மூன்றாவது தேசியவிருதும் கூட இனி
உனை தேடி அலையும்...

கடல் சிப்பிக்குள் முத்து இருக்கும் -தமிழ்
கவிதை சிந்தனைக்குள் முத்துக்குமார்
நீ என்றும் இருப்பாய்...
இப்படிக்கு
ஈடு இணையற்ற உன் இறப்பால்
இதயம் நொறுங்கிய ஒரு ரசிகன் ..
                                 - கவிஅன்பு (14.8.2015)

No comments: