கரி(யானை) முகம் கொண்ட கஜமுகனே - பூத
கணங்களுக்கு அதிபதியான கணபதியே...
வினைகள்தனை நீக்கும் விக்னேஸ்வரனே...
விதியின் கொடுமை போக்க நீயுமொரு அரணே...
ஏற்றம் பெறட்டும் எளியமக்கள் வாழ்வு
உனக்காய் ஏற்றப்பட்ட ஒளிரும் தீபம் போல....
துன்பஇருள் நீங்கி இன்பமது வரட்டும்-நின்
இடது கையில் ஏந்திய இனிக்கும் லட்டு போல....
கல்லாமை நீங்கி கல்வியது வளரட்டும் - உன்
வலதுகை ஆயுதத்தின் வலிமையான கூர்மை போல....
வன்முறை மனம் நீக்கி அன்பு வாசமது பரவட்டும் -நின்
மறுகை தாங்கிய மாசற்ற மலர் போல...
துணையாய் வரும் தும்பிக்கையோனே!
மலரும் முன்னே மொட்டுகளில்
மதிமயங்கி தேன் தேடும்
மானம்கெட்ட மூடர்களை
மகிழ்ந்து நீயும் அழித்திடல் வேண்டும் !....
மதுவுக்கு அடிமையாகி குடும்ப
மகிழ்ச்சியதை தொலைக்கும்
மதிகெட்ட மனிதர்க்கு -நல்
அறிவை நீயும் அளித்திடல் வேண்டும் !!....
மனிதர்களை மட்டுமல்ல - இயற்கை
மரங்களையும் காத்துவிடு மகேசனே!...
இல்லையெனில் இன்று
உனக்கு அரச மரம் - நாளை
தெருவோர ஆண்டிமடம்.....
இருந்தாலும் நவில்கிறேன் நன்றி உனக்கு
நான் வாழும் நகரத்தில் கூட வெட்டப்படாமல்
அங்கும் இங்குமாய் வாழும் அரசமரம்
அதீத ஆண்டவன் நம்பிக்கையால்..........
வேண்டியது எல்லாம் நடக்குமா தெரியாது..
எதிர்காலத்தை இம்மனித மனமும் அறியாது...
உன்முகத்தில் இருப்பது தும்பிக்கை....
எனக்கு உன்மேல் சிறிது நம்பிக்கை...
கேட்டுவைத்தால் உன்னிடம் - மன
பாரம் குறையும் என்னிடம்...
அதனால் கேட்கிறேன் - வருங்காலத்தில்
நடக்குமா பார்க்கிறேன்...
- கவிஅன்பு
No comments:
Post a Comment