உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 24 September 2013

தேநீருக்குள் நினைவு..

அருந்தும்போது தோன்றும்
ஆனந்தம் எனக்கு மட்டுமே
தெரியும்......
தேநீர் கோப்பையில்
தேக்கி வைக்கப்பட்ட
உன் நினைவுகள் .......
              - கவிஅன்பு

விழுங்கும் விழியாள்...

"சாப்பிட்டாயா"
கேட்டது நான்...
"பசியில்லை"
சொன்னது  நீ....
புரிந்து கொண்டேனடி - காந்த
பார்வையால் பலரை
விழுங்கும்போது உனக்கு
எப்படி பசிக்கும் என்று!....
    - கவிஅன்பு

அதிகாலை நினைவு ....

அதிகாலை..
தேநீர் அருந்திக்கொண்டே
கண்கள்
நாளிதழை படிக்க ....
மனமோ உன்
நினைவுகளை படிக்கிறதே!...
  - கவிஅன்பு

தேனிதழ்

பசித்தது எனக்கு.
பேசியது  உன்
இதழ்கள்......
     -கவிஅன்பு....


Tuesday 17 September 2013

கவிதை

உன்னை  நினைக்கும்
நேரங்களில் மட்டுமே
காகிதமும் பேனாவும்
கட்டித்தழுவி
காதல் செய்கின்றன!.....
"கவிதை"
     - கவிஅன்பு

Friday 13 September 2013

அணைப்பு

இரவில் அவளை
அணைத்தால்தான்
எனக்கு தூக்கம்
வரும்....
"மின்விளக்கு"
            -கவிஅன்பு

கரி படிந்த உள்ளம்

ஓர விழியில் கன்னியர் 
உடல் அசைவை பார்த்துகொண்டே 
"கையில் இயன்ற காசை போடுங்க" 
கற்பூர தட்டை நீட்டிய பூசாரி.. 
தொட்டு வணங்கிய என்
உள்ளங்கையில் மட்டும் அல்ல - அவர்
உள்ளத்திலும் படிந்திருந்தது
கரி ! ..........
              - கவிஅன்பு.

Thursday 12 September 2013

காலை

பகலவன் வரவை கண்டு
பயமாம் .....
கண் சிமிட்டுவதை
நிறுத்திவிட்டன
விண்மீன்களும்
வீதி விளக்குகளும் ! ......
- கவிஅன்பு


Monday 9 September 2013

விநாயகரிடம் ஒரு வினவல்.....

வேழமுகம் கொண்ட - அழகு 

வேலவ மைந்தனே வணக்கம் - நின் 

வரலாறுதனை கேட்டால் ஆத்திகர் 

நெஞ்சமும் மகிழ்வால் கொஞ்சம் மணக்கும்... 


இன்று உனக்கு சதுர்த்தி - உன்மேல் 

எனக்கோ கொஞ்சம் அதிருப்தி.... 

நீ வீற்றிருக்கும் நாடு - அதுதான் 

கவிதை பறவையான என்கூடு...அது 

பண்பாடெனும் கிளைகள் அகன்று - தேச 

பக்தியும் அழிந்து 

காலத்தால் சிதைந்து வருகிறது 

கண்டுகொள்ளவில்லையே நீ 

கஜமுகனே! 


உன் அருகில் தாரம் இல்லை! 

என் நாட்டிலும் இப்பொழுது 

நிறைவான பொருளாதாரமும் இல்லை!! - 

உன் கையில் சாப்பிட 

லட்டு உண்டு.! - இன்று 

என் நாட்டிலோ வீழ்ச்சியடைந்த 

துட்டு உண்டு!! 

நீ பெருச்சாளியில் அமர்ந்து இருப்பாய் 

என் நாடும் கூட இப்பொழுது அப்படித்தான் ... 

ஊழல் பெருச்சாளிகளின் கீழ் 

சொந்த உணர்வற்று ஏழைகளுக்கு 

உணவற்று போயுள்ளதே! 

திட்டங்கள் போட்டாலும் தீரவில்லை 

ஏழ்மை! - பேருக்கு 

சட்டங்கள் போட்டாலும் சாகவில்லை 

வன்கொடுமை !!- பாலை 

மணலில் பெய்த மழைத்துளிகளாய்-இந்த 

திட்டங்களும் சட்டங்களும்.... 


கொழுக்கட்டை விரும்பி உண்ணும் கோமகனே 

நீ இருக்கிறாயா இல்லையா என்று 

தினந்தோறும் நாட்டில் நடைபெறும் வாதம் !- ஆனால் 

ஜெயிப்பதோ இடையில்வரும் தீவிரவாதம்!! 

இதையேன் 

தடுக்கவில்லை இறைவா நீ சொல்லிய வேதம்!!! 

நீ இருக்கிறாய் என்று சொல்லிய பின்னும்... 

மதங்களின் பெயரை சொல்லி மனிதரை 

சூறையாடும் மனங்கள் இருக்கிறதே இன்னும்.... 

அதில் மாசடைந்து போகிறதே இந்த மண்ணும்... 

அதுவும் ஏனோ ஆனைமுகனே? 


பொய்யோ மெய்யோ அன்று 

வரலாற்றில் சாபம் நீக்கி 

மிருகத்தை மனிதன் ஆக்கினாய்... 

இன்று மனிதர்களையே 

மிருகமாக மாற்றி விட்டாயோ? 

காமப்பசியில் சிறு கன்னியரை 

வதைக்கும் மிருகங்கள்.... 

மதத்தின் போர்வையில் மனிதத்தை 

புதைக்கும் மிருகங்கள் - மக்கள் 

உழைப்பை சுரண்டி வாழும் 

ஊழல் மிருகங்கள்....நீ 

இருக்கிறாயென்று இதையெல்லாம் 

கண்டுகொள்ளாமல் நாங்கள் - பொரி 

கடலை சாப்பிடுகிறோம்! 

தீமை வந்தால் இறைவா என்று 

உனைத்தானே கூப்பிடுகிறோம்!! 

எங்கு செல்கிறாய் நீ அப்பொழுது? 

எண்ணி பார்க்கிறேன் நான் இப்பொழுது.... 


அமைதிக்காய் உன் கையில் ஆயுதம் 

தாங்கினால் உன்னை கடவுள் என்கிறார்.. 

அவர் உரிமைக்காய் ஆயுதம் 

தாங்கினால் மட்டும் கயவர் என்பதும் ஏனோ? 

அமைதியும் உரிமையும் ஆயுதம் ஏந்தினால்தான் 

கிடைக்கும் என்று அறிவுறுத்துகிராயோ நீ - என் 

ஈழத்து தமிழ் சொந்தங்களை பற்றி கொஞ்சம் 

இறைஞ்சுகிறேன் இறைவா இங்கு .... 


நீ இருக்கிறாயா இல்லையா 

தெரியவில்லை-இருந்தால் 

இதையெல்லாம் நீயேன் அறியவில்லை.... 

எனக்கும் அது புரியவில்லை .... 

காணாமல் போன மனித நேயமாய் 

உன்னையும் தேடுகிறேன்... 

கனவிலாவது வந்து சொல்வாயா 

கணபதியே! 


ஆயுதம் நீக்கிவிட்டு -உன் இருகையிலும் 

மலரினை ஏந்தும் காலம் 

மலர வேண்டும் எப்பொழுதும்-அன்றுதான் 

என் மனம் உன்னை 

நினைக்கும் முப்பொழுதும்.... 


நாட்டின் நிலை எண்ணி 

மனதில் அதிகம் வெம்புகிறேன்! 

உன்னால் நல்லது நடக்கும் 

என கொஞ்சம் நம்புகிறேன்!!.... 


இன்னும் மீதி கேள்வி இருக்கிறது 

கேட்க மனம் மறுக்கிறது...... 

போதும்! போதும்!! - விநாயகனே 

"இல்லாதவனிடம் இத்தனை கேள்வியா" 

நாத்திகர் கேட்கலாம்... 

"எல்லாம் தெரிந்தவனிடம் ஏனிந்த கேள்வி" 

ஆத்திகர் கேட்கலாம்... 

இரண்டுக்கும் இடையில் உன்னைபோல 

மௌனமே மகத்தான பதிலாய் இருக்கும் 

எனக்கும்............ 

- கவிஅன்பு 

10.09.2013



Wednesday 4 September 2013

சுவாசத்தில் நீ ....

சுவாசத்தில் வெறும் காற்று
மட்டும்தான் வரும் என்று இருந்தேன்..
ஆனால் அந்த 
காற்றோடு நீயும் கலந்து  வருகிறாயே 
என் தோழியே! - ஆம் 
பூ இன்றி வாசம் இல்லை!
நீ இன்றி எனக்கு சுவாசம் இல்லை!!
 - கவிஅன்பு 

Sunday 1 September 2013

தோழிக்காய் ஒரு கவிதை....

இனிய என் உயிர்  தோழி !..
கற்புதானடி  நம் நட்புக்கு வேலி!!
என் அன்பு செல்ல குட்டி - அமுதமாய்
இனிக்கிற வெல்ல கட்டி!! .
உன் நேச வார்த்தையில் மனசெல்லாம்
மழையாய் மகிழ்ச்சி  கொட்டுகிறது!
கண்களிலும் நெகிழ்ச்சியில்
நீர் சொட்டுகிறது!!
தொப்புள் கொடி  சொந்தம் இல்லை!
சிறு வயதில் தொடர்ந்த பந்தம் இல்லை!!
மழைகால வானவில் போல
ஒரு நேரத்தில் வந்தாய் !
மனம் மகிழும் பாசம் அதை
தூரத்தில் இருந்து  தந்தாய் !! சிறு
பனித்துளி கரைந்து  விடும்
சூரிய உதயத்தில் !.. ஆனால்
பாசமுள்ள தோழி நீ மட்டும் இருப்பாயடி
 என் இதயத்தில் !!...
வானவில்லாய் வந்து சூரியனாய் நிலைத்தவளே !
வேசமில்லா நேசம் காட்டி என் மனதையும் துளைத்தவளே !!
வாழ்க்கையில் நட்பு வரலாம் - உன்னை போல
நட்பே வாழ்க்கையாய் வருவது
கொஞ்சம் அரிது ! - அந்த வகையில் பார்த்தால்
நீதானடி எனக்கு பெரிது !! ....
ஆம் தோழியே  எனக்கு நீ அப்படித்தானடி...
பாசம் காட்டி இதயத்தின் பக்கத்தில் அமர்ந்தவளே!
நேசம் கொடுத்து அன்பு நெஞ்சில் நிறைந்தவளே !!
வசந்த வரவே!
என் இதய உறவே!!
என் செல்ல கன்னுகுட்டி
அன்பு நிறைந்த அம்முகுட்டி .
ஆசை நிறைந்த பொம்முகுட்டி
அன்பு நீடிக்குவரை நமக்குள்
இல்லை பிரிவுகள்!....
என்றும் எட்டி பார்க்கதடி - நம்
உறவில் முறிவுகள் !!.
  - கவிஅன்பு
     3.09.2013
http://www.youtube.com/watch?v=YN1rHhjcUxQ