உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Monday 1 January 2018

புத்தாண்டு வாழ்த்து கவிதை - Happy New Year kavithai

இலக்கியம் படிக்க நேரமில்லை
இயற்கையை ரசிக்க நேரமில்லை !
நித்திரை தொலைத்து நினக்காய்
நெடுங்கவிதை ஒன்றெழுதி
புன்னகையுடன் வரவேற்கிறேன் - ஆங்கில
புத்தாண்டே உன்னை !....

நிமிடங்கள் எல்லாம் கடந்து புறப்பட்டு
பதினேழு உதிர்ந்து பூக்கும் நீ பதினெட்டு !..
இரவு நேரத்தில்தான் இருக்கும் உன் பிறப்பு ! -
மனதால் வாடும் மனிதரின் -பெருந்துன்ப
இருளை களைந்தால் உனக்கு வரும் சிறப்பு !!

மீத்தேனிலிருந்து முழுமை மீட்பு தந்து
நெடுவாசல் மக்களுக்கு நிம்மதி தந்திடு    !
கதிராமங்கலத்திற்கு களிப்பை தந்திடு !!
விளைநிலம் ஏமாற்றம் தந்து - அரசியல்
வியாபாரிகளும் ஏமாற்றம் கொடுக்க
விவசாயிகள் படும் வேதனைக்கு எல்லாம்
விடியல் ஒன்றை கொடுத்திடு  !

காவிரி,முல்லை நீரால்  தோன்றும்
கலகம்  இல்லாத காலத்தை கொடுத்திடு !
குடும்பத்தை கெடுக்கும் குடிதனை கொடுக்கும்
மதுபான கடையில்லா  மாநிலம் தந்திடு !
உள்நாட்டு கடற்படை கூட உயிர்வாங்கும்
மீனவர் வாழ்வுக்கோர் மீட்சி  கொடுத்திடு !

மரங்களை சாய்த்து மனிதனையும் சாய்க்கும்
ஓகி போன்ற புயலுக்கு  ஓய்வை கொடுத்திடு !
வந்தது நீட்டு(NEET )வாங்கியது ஓருயிரை கேட்டு
இதயம் நிறுத்தா இனிய கல்விநிலை கொடுத்திடு !
கீழடி அகழ்வாய்வு  கிடப்பில் போட்டு - தமிழுக்கும்
கீழான மொழியினை எல்லாம்  பலகையில் போட்டு
அருமை மொழியினை அழிக்க எண்ணும்
அவலம் மாறும் ஆண்டை கொடுத்திடு !

இன்பங்கள் தோன்றட்டும் திக்கெட்டு
சமத்துவம் சமாதானம் சகோதரத்துவம்
உருவாக்க வேண்டுமென்று புறப்பட்டு !
வருக வருக  நீ ரெண்டாயிரத்து பதினெட்டு !!
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

 -துள.கவிஅன்பு,
விழைவுப்பூக்கள் சேவை அமைப்பு,
தூத்துக்குடி.

No comments: