உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Tuesday 21 November 2017

உருமாறும் மேகம் - கவிதை

அமர்ந்த இடத்தில் இருந்து
அசைந்து செல்லும்
அழகான  பெண்ணை பார்க்கிறேன் !..

தாடி வைத்த முதியவர்
தள்ளாடி போவதை 
தன்னிலை மறந்து பார்க்கிறேன் !.

காகம் போல ஒரு பறவை
கண் இமைக்கும் நொடியில்
பறந்து மறைவதை என்
கண்களால் பார்க்கிறேன் !

குதிரையோடு யானையும்
கூட்டமாய் வருவதை
குதூகலமாய் நானும் பார்க்கிறேன் !

இலைகளும் மரங்களும்
தோன்றி மறையும் காட்சியை
இமைகள் ஊடே பார்க்கிறேன் !

இன்னும் பல உருவங்கள்
இமைப்பொழுதில் மாறுவதை
இமைகள் இமைக்காமல்  பார்க்கிறேன்!

வீட்டுக்குள் அமர்ந்து வெளியில்
இத்தனையும் பார்க்க இயலுமோ
விந்தையாய் தோன்றுகிறதா ?
எப்படி சாத்தியம் என்று
எண்ணவும் தோன்றுகிறதோ ?

ஒன்றும் இல்லை
ஒற்றை சன்னல் திறந்து வைத்து
உயர தெரியும் வானை பாருங்கள்..

உருமாறி  செல்லும் மேகம்தனில்
உருவங்கள்  எல்லாம் தெரியும்..

மேக திட்டுகளின் உருமாற்றத்தில
கடவுள் உருவம் கூட
கண்ணில் தெரிந்து போகும்...
               - கவிஅன்பு ,உச்சிநத்தம்.
Related image

No comments: