உளமாற நம்பியவர்களை ஏமாற்றாதே! உதவி செய்தவர்களை மறக்காதே! உண்மையாய் நேசிப்பவர்களை வெறுக்காதே!!..

Saturday 12 May 2018

செவிலியர் தின வாழ்த்து கவிதை - கவிஅன்பு

சூரியனுக்கு இரவில் ஓய்வு
நிலவுக்கு பகலில்  ஓய்வு
செவிலியருக்கோ
இல்லையே
இப்படியோர் ஓய்வு !

இரவு பகலாய்
பணி செய்தாலும்
சூரியனாய் சுட்டெரிக்காமல்..
அமாவாசையாய்
கடுமை காட்டாமல்...
புன்னகைதனை முகத்தில் காட்டும்
புத்தொளி பௌர்ணமிகள்
செவிலியர்கள் !

வெள்ளை என்றால்
வெறுமை , விதவையென்ற
சமூகத்தில்
வெள்ளை என்பது
கருணை ,சேவையென்று
பதியவைத்து - கடமை
பண்போடு பணிபுரியும் 
வெண்ணிற ஆடை தேவதைகள்
செவிலியர்கள் !

உண்ண நேரமின்றி - நோயாளி
உடல் நலனில் 
அருவருப்பின்றி
அக்கறை காட்டி - தன்னை
உருக்கி பிறரை காக்கும்
தன்னலமற்ற
மெழுகுவர்த்திகள்
செவிலியர்கள் !

கண்ணனுக்கு தெரியாத வேராய்
சேவையில் மருத்துவருக்கும் மேலாய்
அன்னை தெரசாவாய்
நைட்டிங்கேல் அம்மையாராய்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
செவிலியர்கள் அனைவர்க்கும்
செவிலியர் தின வாழ்த்துகள்
        -கவிஅன்பு

Tuesday 1 May 2018

தொழிலாளர் தின வாழ்த்துகள்

அரிதாரம் பூசும்
நடிகர்கள் மத்தியில்
தன் உடலையே
அரிதாரமாய் மாற்றி
உழைக்கும்
தொழிலாளர்களை
மதிப்போம் !
மரியாதையை தருவோம் !!
                         - கவிஅன்பு