Saturday, 6 May 2017

மரம் வளர்ப்போம் கவிதை - கவிஅன்பு

மனிதனே சிந்திப்பாயா மரம் பற்றி...
மரம் வளர்க்க சொல்கிறேன் உன் கரம் பற்றி..      

குடம்குடமா தண்ணீரை  குடிச்சும் தாகம் தீரல !..
கோடையோட வெப்பமது கொஞ்சமும் மாறல !!
வெயிலுக்கு இளைப்பாற  மரமில்ல -ஆனாலும்  
மனுசனுக்கு மரம் வளர்க்க இங்க மனமில்ல !!

கண்ட இடங்களில் கட்டிடம் முளைத்து
கண்போன்ற மரங்கள் காணாமல் போனால்
கோடை வெப்பம் கொளுத்தாமல் - நம்மை
கொஞ்சவா செய்யும்? - பூமியின்
பச்சையை அழித்து பலவண்ணம் ஏந்துகிறோம்…
களைப்புடன் நடை ! கைகளில் வண்ண குடை !

மழை நீருக்கு மரங்கள்தானே  கருவானது !
அதை மெல்ல அழித்ததால் தெருவெங்கும்
குடிநீர் பஞ்சம்தானே இங்கு உருவானது !!...
மரம் கொன்று மழை வேண்டி இங்கே யாகங்கள்!
கலிகால மனிதரால் மரங்களோடு  சேர்ந்து
மறைந்து போகிறது வான் மழை மேகங்கள்!!

வறுத்தெடுக்கும் வானத்து சூரியனால்
வாடி போகிறது  தேகங்கள் !
வாசல்தோறும் குடிநீர் பஞ்சத்தால்
தணியாமல் நீளும்  மனித தாகங்கள் !!

கோடைக்கு இயற்கை  மரங்கள் அன்றி
குளிர்சாதன செயற்கையை  நீ நாடினால்
பக்கவிளைவில் பாதிக்கப்பட்டு
பாழாய் போயி விடும்  உன் உடல் !
உன் நலன் காக்கவும் உரிமையோடு
மரம் வளர்க்க சொல்லி நான்
வரைகிறேன் இந்த கவிதை மடல் !!.....

மரம் வளர்ப்போம் ..
மரமே நமக்கு கடவுளின் கொடை....
வெயிலுக்கு இனி கைகளில் வேண்டாம் குடை ..
மரமே பூமியின் பசுமை ஆடை
மரம் இருந்தால் வதைக்குமா இந்த கோடை?

வியர்வையில் குளிக்காமல்
நம் சந்ததி  தண்ணீரில் குளிக்க
மரங்களை வளர்த்து வைப்போம்
கட்டிடங்களை விட பூமியில் மர
விதைகளை அதிகம் விதைப்போம்....

இனியும் மரம் வளர்க்காமல்
சுயநல மனிதனாய்  பூமியில்  நீ
சுற்றி வந்தால் காணாமல் அழிந்து போவது
மரங்கள் மட்டும் அல்ல
வாட்டும் வெயில் தண்ணீர் பஞ்சத்தோடு
வறட்சியில் சிக்க போகும் உன்
வருங்கால சந்ததியும்தான்…
                  - கவிஞர்  கவிஅன்பு..



















No comments:

Post a Comment